மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிலை

மீனவர் வீசிய வலையில் ஐம்பொன் சாமி சிலை சிக்கியது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெய்வாசலை சேர்ந்தவர் செல்வராஜ் (40). மீனவர் இவர் நேற்று முன்தினம் வடுவூர் ஏரியின் மேற்கு பகுதியில் கண்ணனாற்று பாலத்தில் மீன் பிடிக்க வலை வீசியிருந்தார்.
அப்போது 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன சாமி சிலை சிக்கியது. அதை வெளியில் எடுத்து பார்த்தபோது பழைமை வாய்ந்த கிருஷ்ணன் சிலை என்பது தெரிந்தது. இது குறித்து செல்வராஜ் வடுவூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் சிலையை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர்.
பின்னர் மன்னார்குடி தாசில்தார் முருகேசனிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. தொல்பொருள் துறை ஆய்வுக்கு பிறகே சிலையின் மதிப்பு எவ்வளவு என தெரியவரும் என்றார் தாசில்தார். வடுவூர் ஏரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற கோதண்டராமர் சாமி கோயிலில் தற்போது இராம நவமி விழா நடந்து வருகிறது. இந்நிலையில் பழமையான கிருஷ்ணர் சிலை ஏரியில் கிடைத்திருப்பது பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.