வரம் வேண்டும்....!



இந்த‌ உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும்.

அதில் நான் மட்டுமே ராஜாவாக இருக்க வேண்டும்.
ஆழ் கடலின் மேல் நடந்து செல்ல இரண்டடி பாதை வேண்டும்.
துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள மனைவி என்ற பெயரில் தோழி வேண்டும்.
கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக நட்பின் கரங்கள் வேண்டும்.
கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை திருத்தி வாழ வேண்டும்.
துணிகளை போலவே மனித மனங்களையும் சலவை செய்ய வேண்டும்.
அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில் என் பெயரும் இருக்க வேண்டும்.
ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று என்னுடன் நட்புறவாட வேண்டும்.
கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை மனிதனாக மாறும் சாபம் பெற்று மக்களின் துயர் அறிய வேண்டும்.
காதல் என்ற பெயரில் துரோகத்தை பரப்பும் தோழிகள் மாறும் நிலை வர வேண்டும்.
இந்த உலகத்தை புரிந்து கொள்ள இன்னும் ஓர் இதயம் வேண்டும்.
காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர் மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும்.
எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு நண்பனாக வரும் நிலை வரவேண்டும்.
நினைத்தவுடன் மரணம், விரும்பியவுடன் ஜனனம் கிடைக்கும் உன்னத நிலை வேண்டும்.
அழியாத கல்வியையும், குறையாத செல்வத்தையும் கொடுக்கும் விலை நிலம் வேண்டும்.
காணி நிலம் வேண்டும் என் பாடிய பாட்டுடைத் தலைவன் பாரதி எனக்கு குருவாக வரும் வரம் வேண்டும்.
எனது கண்ணீரை மட்டுமல்ல எனது இதயத்தில் ஏற்பட்ட வலிகளையும் துடைத்தெரிய வேண்டும்.
சிலந்தியின் கூட்டில் சில நாள் சிறையிருக்க ஜில்லென்ற வரம் ஒன்று வேண்டும்.
பறவையின் கூட்டில் பன்னிரு இரவு படுத்துறங்க பஞ்சு மெத்தை வேண்டும்.
துன்பம் மொத்தமாக தொடர்ந்து வந்தாலும் சந்தோசம் தவணை முறையிலாவது கிடைக்கும் நாள் வர வேண்டும்.
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை பிடுங்கி அதன் வலிகளை எந்தன் பட்டு விரல்களால் தடவி கொடுக்கும் மாபெரும் வரம் வேண்டும்..
பூ, காய், கனி, செடி, கொடி, மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும்.
மான், மயில், குயில், புறா, நாய் இவையனைத்தும் எனக்கு நட்புறவாட வேண்டும்.
மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும்.
பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும்.
உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும்.
நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும்.
நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும்.
சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும்.
பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு அழிப்பான் வேண்டும்.
எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக்கும் நாள் வர வேண்டும்.
நம்பிகைகுரிய நட்புகள் வேண்டும்.
சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும்.
சாக்கடை கலக்காத அரசியல் வேண்டும்.
மரண தேவன் கூட மக்களின் அனுமதி பெற்று உயிரை எடுக்கும் நிலை வர வேண்டும்.
எப்போது எல்லாம் இந்த உலகம் பிடிக்கவில்லையோ
அப்போது எல்லாம் மீண்டும் தாயின் கருவறை
உள்ளே சென்று படுத்துக் கொள்ளும் உன்னத வரம் வேண்டும்.
தலையணைக் கூட தாய் மடியாக மாற வேண்டும்.
மனிதலோகத்திற்கும் மரணலோகத்திற்கும்
சென்று வர ஒரு நூறடி பாதை வேண்டும்.
இவையனைத்தும் உண்மையாக நடக்கும் என்றால்
இன்னொரு பிறவி நான் பிறக்க வேண்டும்.

அப்போதும் கூட எனது நட்புகள் தான்
எந்தன் சுவாசக் காற்றாக இருக்க வேண்டும்..........
உன் இதயக் கோவிலில் நான் குடியிருக்க வேண்டும்.